தேர்வு பயம்-ஆசிரியர் பயிற்சி மாணவி தற்கொலை
நெல்லை மாவட்டம் புளியங்குடியிலுள்ள டிஎன் புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் பிச்சைகனி-இசக்கி தம்பதி. இவர்களுக்கு மகேஷ்வரி, ராமலெட்சுமி, மணிகுமார் ஆகிய மகன், மகள்கள் உள்ளனர். இதில் மகேஸ்வரி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகேயுள்ள ஆடுதுறை அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தார்.
அங்கு உள்ள விடுதியில் தங்கி மகேஸ்வரி படித்தார். தற்போது நடக்கும் செய்முறை தேர்விற்காக மற்ற மாணவிகளுடன் சேர்ந்து மகேஸ்வரியும் தயாராகிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாடியிள் உள்ள ஒரு அறையில் மகேஷ்வரி தூக்கப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை இதை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி ரெசாரியோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மாணவி மகேஸ்வரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், ரெக்கார்டு பணிகளை முடிக்க வேண்டியுள்ளது. எழுத்து வேலையும் அதிகமாக இருக்கிறது என்று மகேஷ்வரி சக மாணவிகளிடம் புலம்பியுள்ளார். நான் எல்லாவற்றையும் முடித்துவிட்டு வருகிறேன், நீங்கள் தூங்க செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
பின்னர் படிப்பதற்காக மேல்மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். அதன்பிறகுதான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேர்வு பயத்தில் மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா. அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மகேஷ்வரியின் உடல் பரிசோதனைக்கு பின் புளியங்குடிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலை பார்த்து தாய், தந்தை மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.