திருமண நாளில் வீட்டில் தீ- சாம்பலான சீர்வரிசை
தூத்துக்குடி: திருமண நாளில் மணமகள் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரொக்கம் உள்பட ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர் பொருள்கள் எரிந்து சாம்பலாயின.
தூத்துக்குடி தமோதரன் நகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் சண்முகவேல் மகள் கமலேஸ்வரி. இவருக்கும் வண்ணார் தெருவை சேர்ந்த காசி மகன் செல்வகுமாருக்கும் இன்று திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இதை முன்னிட்டு நேற்றிரவு மேலசண்முகபுரம் 2-வது தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பிறகு இருவீட்டாரும் திருமண மண்டபத்திலேயே தங்கிவிட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சண்முகவேலின் வீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. மளமளவென பரவிய தீ அருகில் இருந்த பால்ராஜ் என்பவரது வீட்டிலும் பற்றியது.
தகவல் அறிந்ததும் தூத்துக்குடி தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சண்முகவேல் வீட்டில் இருந்த டிவி, கட்டில், பீரோ உள்ளி்ட்ட பொருட்கள் கருகி நாசமாயின. திருமண செலவுக்காக பீரோவில் வைத்திருந்த ரூ. 1.25 லட்சமும் எரிந்து சாம்பலானது.
இதுபோல் பால்ராஜ் வீட்டிலும் ரூ. 5 ஆயிரம், 2 பவுன் நகை, டிவி, கட்டில் எரிந்து சேதமடைந்தன. இருவீட்டிலும் சேர்ந்து சேதமதிப்பு ரூ.2 லட்சமாகும். சண்முகவேல் வீடு தீப்பிடித்த எரிந்த போதிலும் திட்டமிட்டப்படி இன்று காலை அருகிலுள்ள சிவன் கோயிலில் வைத்து திருமணம் நடந்தது.












Click it and Unblock the Notifications