'ஹேர் டை' விஷவாயு தாக்கி 7 தொழிலாளிகள் மயக்கம்
சென்னை: ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த கண்டெய்னரில் இருந்து விஷவாயு பரவியதில் 7 தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை அடுத்த திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகர் பீச் ரோடு அருகில் தனியாருக்கு சொந்தமான கண்டெய்னர் குடோன் உள்ளது. இங்கு ஆஸ்திரேலியாவில் இருந்து கப்பல் மூலம் வந்த கண்டெய்னர் வைக்கப்பட்டிருந்தது.
அதில், ஹேர் டை தயாரிப்பதற்கான மூலப்பொருள் பார்சல்கள் இருந்தன.
இன்று காலை அவற்றை ஹைதராபாத் அனுப்புவதற்காக கண்டெய்னரை முத்து மாணிக்கம், காசி, பெருமாள், சிவகாமி, நடராஜ், குணசேகரன், சகாயராஜ் ஆகிய தொழிலாளர்கள் திறந்தனர்.
அப்போது கண்டெய்னரில் இருந்து பரவிய விஷ வாயுவால் 7 பேருக்கும் கண் எரிச்சலும் மூச்சு திணறலும் ஏற்பட்டது. அடுத்த சில வினாடிகளில் அவர்கள் மயங்கி விழுந்தனர்.
மற்ற தொழிலாளர்கள் ஓடிச் சென்று கண்டெய்னரை மூடிவிட்டு மயங்கிக் கிடந்த 7 பேரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் பின்னர் 5 பேருக்கு நினைவு திரும்பியது. மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை பிரிவிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.