50 கோயில்களில் யோகா-தியான பயிற்சி-அரசு திட்டம்
சென்னை: தமிழகத்தில் உள்ள 50 பெரிய கோயில்களில் யோகா மற்றும் தியான பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார்.
சட்டசபையில் அறநிலையத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய அமைச்சர் பெரிய கருப்பன்,
'உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்..' என்ற திருமூலரின் வாக்கின்படி உடல் நலத்தையும், மன வளத்தையும் பேணி காப்பது இன்றியமையாதது.
இதை கருத்தில் கொண்டு இட வசதி உள்ள 50 பெரிய கோயில்களில் தினமும் காலையில் யோகா மற்றும் தியான பயிற்சிகள் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
நிதி வசதி இல்லாத 2,000 கிராம கோயில்களில் திருவிழா உள்பட மற்ற நாட்களிலும் காலை-மாலை வேளைகளில் பக்தி இசை ஒலிபரப்ப ஒலிபெருக்கி வசதி செய்துத் தரப்படும்.
தற்போது 485 கோயில்களில் சிறுவர்களுக்கான ஒழுக்கநெறி வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடத்தப்பட்டு வருகின்றன. இதை சனிக்கிழமைகளிலும் நடத்த விரிவாக்கம் செய்யப்படும்.
தற்போது சேக்கிழார், திருஞானசம்பந்தர், ஔவையார், தாயுமானவர் போன்ற அருளாளர்களுக்கு மட்டுமே விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
செம்மொழியாம் தெய்வ தமிழில் தேவாரம், திருவாசகம், திருமுறை, பிரபந்தம் பாடிய நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களுக்கும் அவரவருக்கு உரிய நாளில் சிறப்பு விழாக்கள் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications