கருணாநிதி வீடு முன்பு உண்ணாவிரதம் - 200 பெண்கள் கைது
சென்னை: முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற ஏராளமான 200க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையைச் சேர்ந்த தமிழக லட்சிய குடும்பம் என்ற அமைப்பு பூரண மது விலக்கை வலியுறுத்தி கடந்த சில வருடங்களாக போராட்டம் நடத்தி வருகிறது.
அரசு ஏற்று நடத்தி வரும் மது பானக்கடைகளால் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்பத்தினர் பெருமளவில் பாதிக்கப்படுவதாக இவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். எனவே அத்தகைய அரசு மதுபானக்கடைகளை மூட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதி வீடு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து முதல்வர் வீடு உள்ள பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு அமைப்பின் தலைவர் வேலாயுதம் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு கூடி மதுவிலக்கு உறுதி மொழி ஏற்றனர்.
பின்னர் அங்கிருந்த ஊர்வலமாக புறப்பட்டு கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லம் நோக்கி வந்தனர். அங்கு தயாராக இருந்த மயிலாப்பூர் உதவி கமிஷனர் ஐசக் பால்ராஜ், இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
தடையை மீறிச்சென்று அவர்கள் உண்ணாவிரதம் இருக்க முயற்சித்தனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் வாசுகி திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் கோபாலபுரம் பகுதியில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications