துபாய் விமான டயர் 'பழுது': 80 பயணிகள் தப்பினர்
திருச்சி: துபாயில் இருந்துவந்த விமானம் திருச்சியில் தரையிறங்கியபோது அதன் டயர் பழுதடைந்ததது. அந்த டயர் வெடிக்கும் நிலையில் இருந்ததால், 80 பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
துபாயில் இருந்து திருச்சி- சென்னை வழியாக சிங்கப்பூர் செல்லவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 11.10 மணியளவில் திருச்சி விமானநிலையத்தை வந்தடைந்தது.
ஓடுதளத்தில் விமானம் தரையிறங்கும்போது, ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை செய்யும் அமைப்பில் மாற்றம் தெரிவதைப் பார்த்து சந்தேகம் அடைந்த விமானி உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து மீட்புக்குழுவினர் தயாராக இருந்தனர். இந்நிலையில் ஓடுதளத்தில் இருந்து விமானம் நிறுத்தும் இடத்துக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தடைந்தது.
உடனடியாக விமானத்தை பொறியாளர்கள் குழு சோதனையிட்டது. அப்போது, விமானத்தின் ஒரு டயர் வெடிக்கும் நிலையில் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
விமானம் தரையிறங்கியபோது ஒருவேளை அதன் டயர் வெடித்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். நல்லவேளையாக அப்படி நடக்காததால் அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த 80 பயணிகளும் தப்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications