அமெரிக்காவில் சென்னை சாப்ட்வேர் என்ஜினியர் தற்கொலை
நியூயார்க்: நியூஜெர்சியில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் வேலை பறிபோனதால் மன நிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணேஷ் சந்தான கிருஷ்ணன் (27) என்ற அந்த பொறியாளர் தபன் சீ பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த 3ம் தேதி இச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இது குறித்து நேற்று முன் தினம் தான் சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவில் இருந்து தகவல் வந்துள்ளது.
2005ம் ஆண்டு அமெரிக்கா வந்த சந்தான கிருஷ்ணன் தனது பி.எச்டியை முடித்துவிட்டு போஸ்ட் டாக்டோரல் உயர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால், இவருக்கு திடீரென உதவித் தொகை நின்றுபோனதால் ஆராய்ச்சிப் படிப்பை தொடர முடியவில்லை.
இதையடுத்து நியூஜெர்சியில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். வெஸ்ட்செஸ்டர் கவுன்டியில் உள்ள உசிநிங் பகுதியில் அல்பேனி போஸ்ட் சாலையில் ஒரு அடு்க்குமாடி குடியிருப்பில் தனியே வசித்து வந்தார்.
இந் நிலையில் வேலையும் போனதையடுத்து இவர் மன நிலை பாதிக்கப்பட்டார். இதையடுத்து சாலைகளில் போகும் கார்களை விரட்டிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இந் நிலையில் வீட்டு வாடகை கட்ட முடியாமல் அங்கிருந்தும் காலி செய்யப்பட்டார். இதனால் ஒரு வீட்டில் ஷெட்டில் தூங்கி வந்துள்ளார். இந் நிலையில் ஷெட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடந்த மார்ச் 11ம் தேதி இவர் கைது செய்யப்பட்டார்.
இவர் மன நிலை பாதிக்கப்பட்டது தெரியவந்ததால் மன நல சிகிச்சைகாக வெஸ்ட்செஸ்டர் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை தரப்பட்டு டிஸ்சார்ஜ் ஆன இவர் வெளியே வந்தவுடன் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலையில்லாமல் சிரமமப்பட்ட இவரை ஊருக்குத் திரும்பி வந்துவிடுமாறு குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதை சந்தான கிருஷ்ணன் விரும்பவி்ல்லை.
கடந்த ஆண்டு நவம்பரில் இவரது சகோதரி பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றபோது தான் சந்தான கிருஷ்ணன் தெருவில் வசிப்பது தெரியவந்துள்ளது.