சிங்கப்பூர், மலேசியாவில் 'பாடம்' நடத்தப் போகும் லாலு
டெல்லி: இந்திய ரயில்வேயே திறம்பட நிர்வகித்து லாபப் பாதையில் நடைபோட வைத்துக் கொண்டிருக்கும் லாலு பிரசாத் யாதவ், சிங்கப்பூர்,
மலேசியாவில் நிர்வாகம் குறித்த பாடம் நடத்த செல்கிறார்.
இந்திய ரயில்வேயை திறம்பட நிர்வகித்துக் கொண்டிருக்கும் லாலு பிரசாத் யாதவ், நிர்வாகவியல் குறித்த அங்கீகரிக்கப்படாத நிபுணராகவும் மாறியுள்ளார். பயணிகள் டிக்கெட் கட்டணத்தை ஏற்றாமலேயே ரயில்ேவயை லாபப் பாதைக்குக் கொண்டு சென்ற ரகசியம் குறித்து ஹார்வர்ட், வார்டன், அகமதாபாத் ஐஐஎம், பாரீஸ் எச்.இ.சி ஆகிய நிர்வாகவியல் பள்ளிகளுக்கு பாடம் நடத்தி அசத்தினார் லாலு.
இந்த நிலையில் தற்போது சிங்கப்பூர், மலேசியாவுக்கும் லாலு சென்று நிர்வாகவியல் குறித்து உரை நிகழ்த்தவுள்ளார்.
மே 12ம் தேதி சிங்கப்பூர் செல்லும் லாலு அங்கு இன்சீட் எனப்படும் நிர்வாகவியல் கழகத்தின் 350 எம்.பி.ஏ மாணவர்களிடையே உரை நிகழ்த்தவுள்ளார்.
உலகின் டாப் 10 நிர்வாகவியல் பள்ளிகளில் இன்சீடும் ஒன்று. 6 ஆண்டுகளுக்கு முன்பு அழிவுப் பாதையில் தடம்புரண்டு ஓடிக் கொண்டிருந்த இந்திய ரயில்வேயை லாபம் கொழிக்கும் அமைப்பாக மாற்றியது எப்படி என்பதை தனது உரையின்போது விளக்கவுள்ளார் லாலு.
தனது உரையை பக்கா இந்தியில் நிகழ்த்தவுள்ளார் லாலு. அதை மொழிபெயர்ப்பாளர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறுவார்கள். மேலும் கேள்வி நேரமும் இதில் இடம் பெறுகிறது. அப்போது ஆங்கிலத்தில் பேசுவார் லாலு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரைத் தொடர்ந்து மே 15ம் தேதி மலேசியா போகிறார் லாலு. இந்திய ரயில்வேயின் இர்கான் அமைப்பு, மலேசியாவில் ரூ. 4000 கோடி மதிப்பிலான அதி வேக ரயில்வே திட்டம் ஒன்றை நிறைவேற்றும் டென்டரைப் பெற்றுள்ளது.
மலேசியாவின் கேடிஎம்பி ரயில்வேயுடன், இர்கான் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் கீழ், சன்பாம் - காமாஸ் ரயில் நிலையங்களுக்கு இடையே அதிக வேக காரிடாரை இர்கான் அமைக்கவுள்ளது. இதன் மூலம் மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்லக் கூடிய வகையில் பாதை அமைக்கப்படும்.
இந்த ஒப்பந்தம் மே 15ம் தேதி லாலு பிரசாத் முன்னிலையில் முறைப்படி கையெழுத்தாகவுள்ளது.
இதேபோல உலக வங்கி, ஜப்பான், தென் கொரியா ஆகியவற்றிலும் உரை நிகழ்த்த வருமாறு லாலுவுக்கு அழைப்புகள் வந்து குவிந்துள்ளன. இன்னும் இதுகுறித்து முடிவு எடுக்காமல் 'வெயிட்டிங் லிஸ்ட்'டில் வைத்துள்ளார் லாலு.
உலக வங்கியில் கடந்த ஆண்டே லாலு பேசுவதாக இருந்தது. ஆனால் அப்போது நாடாளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்ததால் லாலுவால் அங்கு போக முடியவில்லை.
கடந்த ஆண்டு பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் லாலு என்பது நினைவிருக்கலாம்.