'க்ரீமி லேயரை' நீக்க பிரதமரிடம் பிற்படுத்தப்பட்ட எம்பிக்கள் மனு
டெல்லி: இடஒதுக்கீட்டில் 'கிரீமி லேயர்' என்ற கட்டுப்பாட்டை ஒழித்துக் கட்டும் வகையில் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என பிரதமரிடம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச் சமூகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் அனுமந்தராவ் தலைமையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வேலு, சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் எம்பிக்களும் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் பிரதமரிடம் அளித்த மனுவில்,
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டில்,கிரீமி லேயர் என்ற அம்சத்தை நீக்க வேண்டும்.
அதற்காக அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும். இதற்கான மசோதாவை அடுத்த பார்லிமென்ட் கூட்டத் தொடரின்போதே தாக்கல் செய்ய வேண்டும்.
பிற்படுத்தப்பட்டவர்களின் நலன்களை காக்கும் வகையில் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். நீதித்துறையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து நாச்சியப்பன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை அமல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.