37 இலங்கை அகதிகள் தமிழகம் வருகை
ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து இன்று 37 அகதிகள் ராமேஸ்வரத்துக்கு படகுகள் மூலம் வந்தனர்.
இலங்கையில் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே சண்டை வலுத்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் அகதிகள் வருகை துவங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் அரிச்சல்முனையில் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் 37 பேர் படகுகளில் வந்திறங்கினர். இதில் 14 பேர் குழந்தைகளாவர்.
தகவலறிந்த வருவாய் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை மண்டபம் அகதிகள் சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் யாழ்பாணம், வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் இருந்து வந்துள்ளனர். தங்கள் பகுதியில் குண்டு வீச்சு அதிகமானதைத் தொடர்ந்து உயிருக்கு பயந்து தமிழகத்துக்கு வந்துள்ளதாகவும் படகில் வர ரூ.1.76 லட்சம் கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.
அந்தமானில் 60 இலங்கை மீனவர்கள் கைது:
இதற்கிடையே அந்தமான் நிக்கோபார் அருகே எல்லை தாண்டி வந்த இலங்கை மீனவர்கள் 60 பேர் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.