தடுப்பூசி: நெல்லையிலும் ஒரு குழந்தை பலி
திருவள்ளூரில் தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகளும், திண்டுக்கல்லி்ல் ஒரு குழந்தையும் பலியாயின. அதே போல ஒரிஸ்ஸாவில் 2 குழந்தைகளும் பலியாகியுள்ளன.
தர்மபுரியில் ஒரு குழந்தையும் தடுப்பூசியால் பலியானதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதை மருத்துவ அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இந் நிலையில் நெல்லையில் தடுப்பூசி போடப்பட்ட ஒரு குழந்தை பலியாகியுள்ளது.
நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்தவர் கணேசன்-முத்துமாரி தம்பதியின் மகள் முத்துநாகு. 8 மாதமான இந்தக் குழந்தைக்கு கடந்த 23ம் தேதி மீனாட்சிபுரம் மாநகராட்சி மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போட்டால் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும் என்பதால் அதற்கும் மாத்திரை கொடுத்துள்ளனர். குழந்தை முத்துநாகுக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. தாயார் மாத்திரை கொடுத்துள்ளார்.
ஆனால் காய்ச்சல் அதிகமாகி குழந்தைக்கு வலிப்பு ஏற்படவே நெல்லையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குழந்தை முத்துநாகு இறந்தது.