போலி டிரான்ஸ்பர் உத்தரவு பிறப்பித்த கல்வி அதிகாரி கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில், சென்னை தொடக்கக் கல்வித்துறை இயக்குநரின் கையெழுத்தை போலியாக போட்டு, போலி இடமாற்ற உத்தரவைப் பிறப்பித்த வழக்கில் திண்டுக்கல் மாவட்ட உதவி தொடக்கக் கல்வி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் பணியாற்றிய 9 ஆசிரிய, ஆசிரியைகள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் இடமாறுதலாகிச் சென்றனர். இவர்களில் 8 பேர் ஆசிரியைகள், ஆசிரியர் ஒருவர்.
8 ஆசிரியைகளும் இடமாறுதலாகிச் சென்ற நிலையில் ஆசிரியர் மட்டும் பணியில் சேருவது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் விசாரிக்கச் சென்றார்.
அப்போது அவரு பணி இடமாறுதல் உத்தரவைப் பார்த்த அங்குள்ள அதிகாரிகள் அதில் இடம் பெற்றிருந்த தொடக்கக் கல்வி இயக்குநரின் கையெழுத்து போலியானது என்பதைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து 9 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மாவட்ட கல்வி அதிகாரி, போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடந்தது. இதில் நத்தம் யூனியன் உதவி தொடக்க கல்வி அதிகாரி குருசண்முகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக தட்டச்சாளர் தமிழரசி, திண்டுக்கல் டிராவல்ஸ் நிறுவன அதிபர் சுரேஷ்குமார் ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று குருசண்முகத்தைக் கைது செய்தனர். தமிழரசியும், சுரேஷ்குமாரும் தப்பிவிட்டனர். அவர்களைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.
தமிழரசிதான், சம்பந்தப்பட்ட 9 ஆசிரியர், ஆசிரியைகளிடமும் தான் இடமாறுதல் வாங்கித் தருவதாக கூறி ஆசை காட்டியுள்ளார். அதற்கு குரு சண்முகம் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து 9 பேரும் மொத்தமாக ரூ.6 லட்சம் பணத்தை சுரேஷ்குமாரிடம் கொடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இதுபோல 110 ஆசிரிய, ஆசிரியைகள் போலியான இடமாறுதல் உத்தரவுகளைப் பெற்றுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பெருமளவு பணம் இதில் கைமாறியுள்ளதாகவும் போலீஸார் கூறுகின்றனர். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் இடமாறுதல் உத்தரவுகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.