ஜெவுக்கு வரி ரத்து-எதிர்த்து வருமான வரித்துறை வழக்கு
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கு தொடர்பாக விதிக்கப்பட்ட அபராதத்தை வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 93ம் ஆண்டு முதல் 98ம் ஆண்டு வரை ஜெயலலிதா வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, வருமான வரி அதிகாரிகளே கணக்கிட்டு ஒரு தொகையை வரியாகவும் அபராதமாகவும் செலுத்த உத்தரவிட்டனர்.
ஆனால், இதை எதிர்த்து வருமான வரித்துறை ஆணையத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, செலுத்த வேண்டிய வரி தொடர்பான உத்தரவில் சில மாறுதல்களை செய்து ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி மொத்தம் ரூ.87 லட்சம் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
இதையும் எதிர்த்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் ஜெயலலிதா அப்பீல் மனு தாக்கல் செய்தார்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததற்கு, தனது ஆடிட்டரின் அஜாக்கிரதை தான் காரணம் என ஜெயலலிதா தரப்பில் கூறியதை, தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டு அபராதத்தை ரத்து செய்தது.
இந்த அபராத ரத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அப்பீல் மனு தாக்கல் செய்தது. இதை நீதிபதி ரவிராஜ பாண்டியன், நீதிபதி ஜனார்த்தன ராஜா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.
வருமான வரித்துறையின் சார்பில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜுனா ஆஜராகி வாதாடுகையி்ல்,
போயஸ் தோட்டத்தில் நடந்த கட்டுமான பணியை ஜெயலலிதாவே நேரடியாக மேற்பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வராக இருக்கும் போது கட்டுமான பணியை மேற்பார்வையிட ஜெயலலிதாவுக்கு நேரம் இருக்கும்போது, அதே கவனத்தை வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதிலும் காட்டியிருக்க வேண்டும்.
போயஸ் தோட்டத்தில் 31 ஏ என்ற முகவரியில் செய்யப்பட்ட கட்டுமானத்துக்கு ரூ. 1.85 கோடிம், எண் 36 முகவரியில் செய்யப்பட்ட கட்டுமானத்துக்கு ரூ. 1.39 கோடி, ஹைதராபாத்தில் உள்ள சொத்துகளுக்கு ரூ. 2.47 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
ஆனால், எண் 31 ஏக்கு ரூ. 1.37 கோடி, எண் 36க்கு ரூ.79 லட்சத்து 75 ஆயிரம், ஹைதராபாத்தில் உள்ள சொத்துகளுக்கு ரூ. 1.39 கோடி செலவு செய்யப்பட்டதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதன் மூலம் உண்மையான தகவல்களை மறைத்துள்ளார் என வாதிட்டார்.
இதையடுத்து, வருமான வரித்துறை தாக்கல் செய்த அப்பீல் மனுவை, நீதிபதிகள் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர்.
மேலும் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீண்டும் ஜூன் மாதம் விசாரணைக்கு வருகிறது.