கிராம நர்ஸுகளும் தடுப்பூசி போடுவார்கள்: அரசு விளக்கம்
சென்னை: கிராம செவிலியர்கள் தடுப்பூசி போடத் தடை விதிக்கப்படவில்லை. அவர்கள் மருத்துவர்களின் மேற்பார்வையில் தடுப்பூசி போடுவார்கள் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மை தடுப்பூசி போடப்பட்ட நான்கு குழந்தைகள் இறந்தன. இதையடுத்து தமிழகம் முழுவதும் தட்டம்மை தடுப்பூசி போடும் திட்டம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தடுப்பூசி போடுவது தொடர்பாக சில புதிய கட்டுப்பாடுகளை அரசு நேற்று அறிவித்தது. அதன்படி கிராம செவிலியர்கள் இனிமேல் தடுப்பூசி போட மாட்டார்கள், டாக்டர்கள்தான் அப்பணியைச் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இப்படி ஒரு தடை விதிக்கப்படவில்ைல என்று பொது சுகாதாரத் துறை மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் பத்மநாபன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தடுப்பூசி போடும் திட்டத்திலிருந்து கிராம செவிலியர்களை நீக்கவில்லை. அவர்கள், மருத்துவ அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் தடுப்பூசி போடுவார்கள்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள டாக்டர்களின் நேரடி மேற்பார்வையில் இனி அவர்கள் தடுப்பூசி போடுவார்கள்.
தமிழகத்தில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இனிமேல் புதன்கிழமை தோறும் தடுப்பூசி முகாம் நடைபெறும்.
திருவள்ளூரில் நான்கு குழந்தைகள் இறந்ததற்கு என்ன காரணம் என்பது இமாச்சலப் பிரதேச ஆய்வகத்தின் முடிவைப் பொறுத்துதான் தெரிய வரும். அந்த ஆய்வு முடிவு வந்த பிறகே இறப்புக்கான காரணத்தை கூற முடியும். அதற்கு இன்னும் 10 நாட்கள் ஆகலாம்.
இந்த ஆய்வு முடிவு வந்த பிறகு, அதன் அடிப்படையில்தான், திருவள்ளூர் சம்பவத்திற்குப் பின்னர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கிராம செவிலியர்களை மீண்டும் பணியில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார் பத்மநாபன்.