ராமர் பால வழக்கு: நாளை வரை விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராமர் பாலப் பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்தத் தடையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.
அதன்படி முதல் வழக்காக இந்த சேது சமுத்திரத் திட்ட வழக்கை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், பன்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது சுவாமி சார்பில் ஆஜரான வக்கீல்கள்,நீதிபதிகள் முன்பு ஒரு கோரிக்கை வைத்தனர். நாளைதான் விசாரணைக்கு வழக்கு வருவதாக நாங்கள் நினைத்திருந்தோம். எனவே அதற்கேற்ப ஆயத்தமாகவில்லை. எனவே நாளை வரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்ற நீதிபதிகள், நாளை வரை வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். நாளை இறுதி விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் சுவாமி தரப்பில் இன்னொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுதான் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று மும்முரமாக உள்ளார். இதற்குக் காரணம், அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான மீனம் பிஷரிஸ் பப்ளிக் லிமிட்டெட் நிறுவனத்திற்கு இதனால் பெரும் பலன் கிடைக்கும். இந்த நிறுவனத்திற்கு அவரது இரு மனைவிகளும், இருமகன்களும்தான் உரிமையாளர்கள்.
எனவே இந்த வழக்கில் டி.ஆர்.பாலுவையும் சேர்க்க வேண்டும் என்று சுவாமி கோரியுள்ளார்.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான இடைக்காலத் தடை விலகுமா என்பதை நாளை தெரிய வரும்.