நாளை முதல் ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை
சென்னை: சென்னை ஐகோர்ட்டுக்கு 39 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் மாலா தெரிவிக்கையில், நாளை (மே 1) முதல் ஜூன் 8ம் தேதி வரை 39 நாட்கள் ஐகோர்ட்டுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. கோடை விடுமுறையில் வழக்கு விசாரணைகளை சிறப்பு பணியில் நீதிபதிகள் கவனிப்பார்கள்.
நீதிபதி ராஜசூர்யா, நீதிபதி சுதந்திரம் மற்றும் நீதிபதி சத்யநாராயணன் ஆகியோர் முதல் கட்ட விடுமுறை நீதிபதிகளாக பணியாற்றுவார்கள். மே 18ம் தேதி வரை வழக்கு விசாரணைகளை இந்த 3 நீதிபதிகளும் கவனிப்பார்கள்.
ரிட் மற்றும் பொது வழக்குகளை நீதிபதி ராஜசூர்யாவும், கிரிமினல் மற்றும் ஜாமின் மனுக்களை நீதிபதி சுதந்திரமும் கவனிப்பார்கள். தொழிலாளர்கள் தொடர்பான ரிட் மனுக்கள் உள்ளிட்ட மற்ற வழக்குகளை நீதிபதி சத்யநாராயணன் கவனிப்பார்.
2ம் கட்ட விடுமுறை நீதிபதி வெங்கடராமன், நீதிபதி வேணுகோபால் மற்றும் நீதிபதி சத்யநாராயணன் ஆகியோர் பணியாற்றுவார்கள். ஜூன் முதல் தேதி வரை வழக்கு விசாரணைகளை இவர்கள் கவனிப்பார்கள்.
ஜூன் 1 முதல் 8ம் தேதி வரையிலான கடைசி கட்ட விடுமுறை நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்யன், நீதிபதி ராஜசூர்யா மற்றும் நீதிபதி நாகமுத்து ஆகியோர் கவனிப்பார்கள் என்றார்.