ஆந்திராவில் 2 மதுரை ரெளடிகள் சுட்டுக் கொலை-தமிழக போலீஸ் 'எண்கெளன்டர்'
மதுரை: மதுரையைச் சேர்ந்த ரெளடி கணேசனும், அவனது கூட்டாளியும் ஆந்திர மாநிலம் மதனபள்ளியி்ல் இன்று தமிழக போலீசார் நடத்திய எண்கெளன்டரில் பலியாயினர்.
மதுரை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தலில் ஈடுபட்ட வந்தவன் ஒத்தக்கடை கணேசன் (35). பிரபல ரெளடியான இவனை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால், தலைமறைவாகி விட்டான்.
இந் நிலையில் கணேசன் ஆந்திர எல்லையான மதனபள்ளியில் தங்கி இருப்பதாக தெரிய வந்தது. அங்கு ஒரு நிலப் பிரச்சினை தொடர்பாக கட்டப் பஞ்சாயத்து செய்ய சென்றிருந்த விவரம் தெரியவந்தது.
இதையடுத்து மதுரையிலிருந்து தனிப் படை போலீசார் அங்கு விரைந்தனர். இன்று அதிகாலை கணேசன் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். கணேசனுடன் கூட்டாளிகள் சிலரும் இருந்தனர்.
போலீசார் அவர்களை சரணடையும்படி உத்தரவிட்டனர். ஆனால், அவர்கள் அரிவாள்களுடன் போலீசார் மீது பாய்ந்து பயங்கரமாகத் தாக்கினர்.
இதையடுத்து அவர்களை போலீசார் சுட்டதில் ஒத்தக்கடை கணேசன், கூட்டாளி ஒருவன் ஆகியோர் அந்த இடத்திலேயே பலியாயினர்.
ரெளடிகள் தாக்கியதில் போலீசார் சிலருக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. கணேசனுடன் இறந்த மற்றொரு ரெளடியின் பெயர் விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
காயமடைந்த போலீசார் மதனபள்ளி அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஆந்திர போலீசாருக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையை சேர்ந்த கணேசன் மீது 10 கொலை வழக்குகள் உள்ளன. இதில் 5 கொலைகளை கணேசனே நேரடியாக நடத்தியுள்ளான்.
பணத்துக்கா ஆட்களை கடத்துவது, நிலம்-பணம் பிரச்சனைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தவன். இவனுக்கு ஏராளமான சொத்துக்களும் உள்ளன.
கொலை வழக்கு ஒன்றில் கணேசனுக்கு ஆயுள் தண்டனை கிடைத்திருந்தது. அதில் மேல் முறையீடு செய்து சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்தான்.
ஆனாலும் தொடர்ந்து தனது கொலை, கொள்ளைகளை அரங்கேற்றி வந்தான். கணேசனுக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.