ரொம்ப நல்லவரு.. இலங்கை கிரிக்கெட் மீடியா மேனேஜர் நீக்கம்
கொழும்பு: மீடியாவுடன் மிக நெருக்கமாக பழகிய காரணத்திற்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளரை அப்பதவியிலிருந்து நீக்கியுள்ளார் கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால நிர்வாகியான அர்ஜூன ரணதுங்கா.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீடியா மேனேஜர் சமந்தா அல்கமா கூறுகையில், என்னை பதவியிலிருந்து ரணதுங்கா நீக்கியுள்ளதாக கிரிக்கெட் வாரிய தலைமை செயலதிகாரி துலிப் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
மீடியா மேனேஜராக எனது சேவை தேவையில்லை என்று ரணதுங்கா கூறியுள்ளாராம்.
நான் மீடியாவுடன் மிக நெருக்கமாகவும், நல்ல முறையிலும் பழகி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரணதுங்கா கூறியுள்ளார்.
2005ம் ஆண்டிலிருந்து இந்தப் பணியை, ஒரு பைசா சம்பளம் கூட வாங்காமல் நான் செய்து வருகிறேன். எனக்கு எதிராக செயல்பட்ட ரணதுங்கா இப்போது என்னைப் பழிவாங்கி விட்டார்.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இடைக்காலத் தலைவரான ஜெயந்த தர்மதாசாவுக்கு விசுவாசமானவர்கள் மீது பழிவாங்கும் வகையில் நடந்து கொள்கிறார் ரணதுங்கா.
கிரிக்கெட் வாரியத்தில் நடந்து வரும் முறைகேடுகள் மீடியாக்களை எட்டி விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் ரணதுங்கா. இதுதான் பிரச்சினை.
என்னை நீக்கி விட்டால் எல்லாவற்றையும் மூடி மறைத்து விடலாம் என்று ரணதுங்கா நினைத்தால் அது மிகப் பெரிய தவறாகும் என்றார் அல்கமா.












Click it and Unblock the Notifications