திருச்சி மாநகராட்சியில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை
திருச்சி: திருச்சி மாநகராட்சிப் பகுதியில், 20 மைக்ரான் அடர்த்திக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கும், பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தீர்மானம் திருச்சி மாநகராட்சிக் கூட்டத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானத்தில் இதேபோன்ற தடை கோவை மாநகராட்சி, ஊட்டி, கொடைக்கானல் நகராட்சிகளிலும் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது திருச்சி மாநகராட்சியிலும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேயர் சாருபாலா தொண்டமான் கூறுகையில், 20 மைக்ரான் அடர்த்திக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே இந்தத் தடை பொருந்தும். பிளாஸ்டிக் பைகள், கோப்பைகள், டம்பளர்கள், தட்டுக்கள் ஆகியவை இதில் அடங்கும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் அபராதம் விதிக்கப்படும். அதேபோல இந்தப் பொருட்களை விற்கும் வியாபாரிகளுக்கும் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றார்.