தமிழகத்திற்குள் கருணா கும்பல் குழு ஊடுறுவல்?
விடுதலைப் புலிகளிடமிருந்து பிரிந்து தனிப் பிரிவை உருவாக்கியவர் கருணா. ஆரம்பத்தில் இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பில், புலிகளுக்கு எதிராக கருணா செயல்பட்டு வந்தார். ஆனால் கடந்த ஆண்டு அவர் லண்டனுக்குத் தப்பிச் சென்றார். அங்கு இங்கிலாந்து போலீஸாரிடம் சிக்கி போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல் விறுவிறுப்படைந்துள்ளது. இரு தரப்பினரும் கடுமையாக மோதி வருகின்றனர். இரு தரப்பிலும் உயிர்ப்பலி நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது.
இந்த நிலையில் கருணா பிரிவினர் தமிழகத்திற்குள் ஊடுறுவ முயல்வதாகவும், இங்குள்ள முக்கிய தலைவர்களைக் கடத்தத் திட்டமிட்டு வருவதாகவும் உளவுப் பிரிவு (ஐபி) எச்சரித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்த சதிச் செயலுக்கு அவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் ஐபி எச்சரித்துள்ளது. இலங்கை ராணுவம் இந்த சதித் திட்டத்ைத தீட்டிக் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக விடுதலைப் புலிகள் எதிர்ப்பு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறும் ஐபி தமிழக காவல்துறையை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஐபி அறிவுறுத்தியுள்ளது.