'டைம் வேஸ்ட்' கங்குலி - வார்னே பாய்ச்சல்!
ஜெய்ப்பூர்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் செளரவ் கங்குலி நேற்றைய ஐபிஎல் டுவென்டி 20 போட்டியின் போது நேரத்தை வீணடித்து நடந்து கொண்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஷேன் வார்னே குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெய்ப்பூரில் நேற்று கங்குலி அணிக்கும், வார்னே அணிக்கும் இடையிலான ஐபிஎல் டுவென்டி 20 போட்டி நடந்தது. இதில் வார்னே அணி அபார வெற்றி பெற்றது. போட்டி முடிவில், வார்னே செய்தியாளர்களிடம் பேசுகையில் கங்குலியை சரமாரியாக சாடினார்.
ஜெய்ப்பூர் வீரர்களை அதிக நேரம் காக்க வைத்து கடுப்பேற்றினார் கங்குலி என அவர் குற்றம் சாட்டினார். வார்னே இதுகுறித்துக் கூறுகையில், இன்றைய போட்டியில் கங்குலி நேரத்தை வீணடித்து எங்களது பொறுமையை சோதித்து விட்டார்.
போட்டியின் தொடக்கத்திலேயே எங்களுக்கு பெரும் எரிச்சல் காத்திருந்தது. பேட்டிங்கின்போது நாங்கள் கடும் வெயிலில் கொல்கத்தா அணியினர் பீல்டுக்கு வருவதற்காக ஐந்து நிமிடம் நாங்கள் களத்தில் காத்திருந்தோம். இப்படி ஒரு நிலை எங்குமே நடந்ததில்லை.
நாங்கள் பீல்டிங்குக்கு வந்தபோது கங்குலிக்காக காத்திருந்தோம். இது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. அவர் எங்களது நேரத்ைத வீணடித்தார்.
ஒவ்வொரு அணியும் ஒரு மணி நேரம் 20 நிமிடங்ளுக்கு ஆட வேண்டும். ஆனால் எங்களுக்கு இது கூடுதல் நேரமாகி விட்டது. இதுகுறித்து நாங்கள் புகார் கூறப் போகிறோம்.
நாங்கள் காத்திருந்த நேரத்தில் கங்குலி என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை. கூடுதல் நேரம் எடுக்க அவர் தீர்மானித்து விட்டதாக நினைக்கிறோம்.
அதேபோல தான் அவுட் ஆனபோதும் அதை ஏற்றுக் கொள்ளாமல் நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். கங்குலியின் செயல்கள் முற்றிலும் சரியில்லை என்றார் வார்னே.
அதேசமயம், வார்னே மீது கங்குலி பாய்ந்துள்ளார். எனனைப் பற்றி விமர்சிக்க வார்னேவுக்கு அருகதை இல்லை என்று கூறியுள்ளார்.
ஹர்பஜன் சிங் - ஸ்ரீசாந்த் சச்சரவுக்குப் பின்னர் வார்னே, கங்குலி மோதல் புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications