மதுரை மாநகராட்சி மீதான மும்பை நிறுவன வழக்கு தள்ளுபடி
மதுரை: மதுரை மாநகராட்சியை எதிர்த்து மும்பையைச் சேர்ந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மும்பையை சேர்ந்த அயன் எக்சேஞ் வாட்டர்லு நிறுவனம், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அதில் மதுரை அவனியாபுரம் மற்றும் சக்கிமங்கலத்தில் பி.ஒ.டி. திட்டத்தின் கீழ் 125 மில்லியன் லிட்டர் கொள்ளவு, 45, 70 மில்லியன் லிட்டர் கொள்ளவு திறன் கொண்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மதுரை மாநகராட்சி சார்பில் கடந்த ஜனவரி 12ம் தேதி டெண்டர் கோரப்பட்டது.
அதில் நாங்களும் கலந்து கொண்டோம். எங்களுடன் மேலும் 4 நிறுவனங்கள் கலந்து கொண்டன. ஆனால் மற்ற 4 நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. எங்களது நிறுவனத்தை வேண்டுமென்றே புறக்கணித்து உள்ளனர். எனவே எங்களது நிறுவன டெண்டரை மாநகராட்சி பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி தனபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த திட்டம் மத்திய அரசு உதவியுடன் ரூ 229.36 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. மனுதாரின் நிறுவனம் சுழ்நிலை அனுபவம் பெறவில்லை. எனவேதான் டென்டரின்போது பரிசீலிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதி தனபாலன் மும்பை நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தார். தீர்ப்பில், மாநகராட்சியின் டெண்டர் தேவைகள், விதிகள், நிபந்தனைகளை மனுதாரர் திருப்தி செய்யவில்லை. டெண்டர் அறிவிப்பில் எல்லா விதிகளும் கூறப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் தீயநோக்கத்துடன் செயல்படவில்லை. மேலும் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கவில்லை. சட்டப்படி எல்லாம் நடந்துள்ளது என்றார்.