மகள்களை கிணற்றில் தள்ளி தாயும் தற்கொலை
தேனி: கணவரின் குடிவெறியால் மனம் உடைந்த பெண் தனது இரு மகள்களை கிணற்றில் தள்ளிக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் உப்பார்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். இவர் கூலித் தொழிலாளி. இவருக்கு ராதிகா (30) என்ற மனைவியும், மேனகா (9), லாவன்யா (6), நிவேதா (3) ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.
வரதராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் சரியாக வேலைக்குச் செல்லாமல் தினசரி குடித்துக் கொண்டிருந்தார். இதனால் வீட்டில் வறுமை தாண்டவமாடியது. கணவரின் பொறுப்பற்றதனத்தால் மனம் உடைந்த ராதிகா, அவருடன் அடிக்கடி சண்டை பிடித்தார்.
இந்த நிலையில் வீரபாண்டி சித்திரைத் திருவிழாவுக்கு குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கித் தருமாறு கணவரிடம் கூறியுள்ளார் ராதிகா. ஆனால் வரதராஜன் அதைக் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் ராதிகா தனது குழந்தைளுடன் அருகில் உள்ள விவசாயக் கிணற்றுக்குச் சென்றார். அங்கு இரு குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி விட்டார். பின்னர் மேனகாவின் கையைப் பிடித்தபடி குதித்தார். அப்போது மேனகா மரக் கிளைகளில் சிக்கி மேலேயே நின்றுவிட்டார். இதனால் மேனகா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ராதிகாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். மேனகாவை மீட்ட அவர்கள் கிணற்றில் குதித்த ராதிகா மற்றும் இரு குழந்தைகளை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தனது மனைவியும், இரு மகள்களும் பிணமாகிக் கிடந்ததைப் பார்த்து வரதராஜன் கதறி அழுதார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.