கருணா கும்பல் ஊடுருவல்-திருமா 'புதிய சந்தேகம்'
சென்னை: இலங்கையின் வட-கிழக்கு மாகாணத்தை பிரிக்கும் செயலை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிங்களப் படையுடன் சேர்ந்து இயங்கும் கருணா குழுவினர் தமிழ்நாட்டில் ஊடுருவி தமிழக தலைவர்களை கடத்தி, விடுதலைப் புலிகள் மீது பழி போட சதி நடக்கிறது என்று இந்திய அரசின் உளவுப் பிரிவு தமிழ்நாடு காவல்துறைக்கு எச்சரிக்கை செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
சிங்களப் படையுடன் இணைந்து செயல்படும் கருணா குழுவினர் என்று குறிப்பிட்டுள்ள இந்திய அரசும் உளவுப் பிரிவும் தான், கருணா குழு ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து விட்டது என்று கூறி, சிங்களப் படைகளுக்கு ராடார்களையும் ஆயுதங்களையும் வாரி வாரி வழங்கி வருகிறது.
இந் நிலையில், திடீரென்று கருணா குழு பயங்கரவாதிகளாக இந்திய உளவுப்பிரிவின் கண்களுக்கு தெரிகிறது.
ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்களப் படைக்கு ராணுவ உதவி செய்யாதே என்று தமிழக மக்களை விடுதலைச் சிறுத்தைகள் அணி திரட்டியது. அதே கால கட்டத்தில் வன்னி பகுதியின் எல்லைப் பகுதியில் புலிகளின் முன் சிங்களப்படை முழுவதுமாக செயலிழந்து நின்றது. இந்த நிலையில், சிங்களப்படை தளபதிக்கு இந்திய அரசு சிவப்பு கம்பள வரவேற்பளித்தது.
இந்திய அரசு சிங்கள அரசுக்கு கொடுத்த ராடார்களையும், ஆயுதங்களையும் திரும்ப பெறுமா?. தமிழ்நாட்டு மீனவர்களை நடுக்கடலில் சுட்டு கொல்லும் சிங்கள ராணுவத்தை கண்டிக்குமா?.
கருணா குழு தமிழ்நாட்டில் ஊடுருவல் என்று கூறியுள்ள இந்திய அரசு, இந்த செய்தியை வழக்கம் போல தன்னுடைய சொந்த அரசியல் ஆதாயத்திற்காக மட்டும் கசிய விட்டிருக்கிறதா? அல்லது ஒரு உண்மையை உணர்ந்து அதன் அடிப்படையில் பன்னாட்டு உறவுகள் குறித்த கோட்பாடுகளுக்கு இசைவாக, சரியான புரிந்துணர்வுடன் இந்திய தலையீடு என்கிற தனது கடமையை செய்ய போகிறதா போன்ற பல்வேறு கேள்விகளுடன், தமிழ்நாட்டு தமிழர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறி வட-கிழக்கு மாகாணங்களை பிரிக்கும் சிங்கள அரசின் சதியை முறியடிக்க இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆவன செய்ய வேண்டும்.
அண்மையில் கடத்தப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.