பிரணாப்-அத்வானி கோரிக்கை: உத்தரவை வாபஸ் பெற்ற சோம்நாத்
கடந்த மாதம் 24ம் தேதி, லோக்சபாவில் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக பாஜக, சிவசேனா, சிரோன்மணி அகாலி தளம், பிஜூ ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 32 எம்பிக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நோட்டீஸ் அனுப்பினார்.
அத்துடன், இதுபற்றி உரிமைக்குழு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.
சபாநாயகரின் தீர்ப்பில் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சியினர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டெல்லியில் இன்று காலை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
மேலும் 32 எம்பிக்களுடன் அவர்கள் சம்பந்தப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சபாநாயகரின் இந்த நடவடிக்கை துரதஷ்டமானது. இதை அவர் திரும்ப பெற வேண்டும் என்று ஜனதா தள தலைவர் ஷரத் யாதவ் கூறினார்.
தேவைப்பட்டால் இந்த பிரச்னையில் அத்வானி போன்ற தலைவரோ அல்லது நானோ தலையிட வேண்டியிருக்கலாம் என்று சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் கூறியிருந்தார்.
லோக்சபா இன்று காலை கூடியபோது காந்தியவாதியும் இந் நிலையில் சுதந்திரப்போராட்ட தியாகியுமான நிர்மலா தேஷ்பாண்டே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் விவாத நேரம் தொடங்கியவுடன் ராஜ் தாக்கரே பற்றி சமாஜ்வாதி உறுப்பினர் ராம்ஜிலால் சுமன் பிரச்னை கிளப்பினார். இதனிடையில் குறுக்கிட்டு தெலுங்கு தேச எம்பி எர்ரன் நாயுடு பேச முயன்றார்.
இந் நிலையில் எந்த காரணத்தையும் சொல்லாமல் திடீரென்று, சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைப்பதாக கூறிவிட்டு விருட்டென்று எழுந்து சென்றார் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி. இதனால் அங்கிருந்த உறுப்பினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் பிற்பகலில் மீண்டும் சபை கூடியபோது, 32 எம்பிக்கள் மீதான உரிமைக்குழு விசாரணை உத்தரவை திரும்பப் பெறுமாறு சாட்டர்ஜியிடம் காங்கிரஸ் கட்சி தலைவர் பிரணாப் முகர்ஜியும், பாஜ தலைவர் அத்வானியும் தனித்தனியே கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து தனது உத்தரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக சாட்டர்ஜி அறிவித்தார்.
ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி உறுப்பினர் ராம் கோபால் யாதவ் பேசினார். சபாநாயகரின் இந்த முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பே ஒரு தொலைக்காட்சியில் இது பற்றி செய்தி ஒளிபரப்பானதாகவும் அது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாதவ் கோரினார். இது பற்றி கவனிப்பதாக சாட்டர்ஜி பதிலளித்தார்.
அதே சமயத்தில், சபாநாயகர் இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாக அவரது அறையில் நடந்த சம்பவங்கள் குறித்து சபையில் விளக்கமளிக்க வேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர் தேவேந்திர பிரசாத் யாதவ் கோரினார்.
அப்போது பிரசாத் யாதவ் பேசிய சில கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு பாஜவுக்கு எதிராக ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆனால் இந்த பிரச்னை பெரிதுபடுத்த வேண்டாம் என்று ராஷ்ட்ரீத ஜனதா தள உறுப்பினர்களை சாட்டர்ஜி கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து இருதரப்பும் மாறி மாறி கூச்சலிட்டனர். இதனிடையே, சபை நடவடிக்கையை அமைதியாக வழிநடத்தி செல்வதற்கு தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த (!) உறுப்பினர்களுக்கு சாட்டர்ஜி நன்றி தெரிவித்துக் கொண்டார்.