கரூர் அருகே குழந்தை பலி-தடுப்பூசி காரணம்?
கரூர்: கரூர் அருகே தடுப்பூசி போடப்பட்ட 4 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது. ஆனால், குழந்தை வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கம்மநல்லூரை சேர்ந்த சுரேஷ்-சிகாமணி தம்பதியின் 4 மாத குழந்தை மதன்குமார். லாலாப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்தோறும் அளிக்கப்படும் மஞ்சள்காமாலை, கக்குவான் இருமல் தடுப்பூசி கடந்த 30ம் தேதி குழந்தை மதன்குமாருக்கு 2வது டோஸ் கொடுக்கப்பட்டது.
அடுத்த நாள் குழந்தை உடல்நலம் பாதித்ததால் மீண்டும் சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் நேற்று முன்தினம் இரவு குழந்தை மதன்குமார் பரிதாபமாக இறந்தான்.
தடுப்பூசி போட்டதில் இருந்து குழந்தை அழுதுகொண்டே இருந்தது. பால்கூட குடிக்கவில்லை. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது குழந்தைக்கு சொட்டு மருத்து கொடுத்தனர்.
குழந்தையின் உடல்நலம் மேலும் மோசமானதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அப்போதும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர்.
தகவலறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் சுப்பிரமணியன், சுகாதார இணை இயக்குனர் சதாசிவம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து சதாசிவம் கூறுகையில்,
குழந்தைக்கு 30ம் தேதி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த நாள் குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. அதற்கு அடுத்த நாள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகுதான் குழந்தை இறந்துள்ளது. தடுப்பூசி அளித்த டாக்டர் ஜோதிமணியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதற்கு முன்னரே குழந்தை வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டு குழந்தை இறந்திருக்கலாம்.
தடுப்பூசியால் இறந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் காரணம் தெரிந்துவிடும் என்றார்.