பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார் பிரதீபா பாட்டீல்
டெல்லி: டெல்லியில் நேற்று நடந்த விழாவில் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார்.
பல்துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கிக் கெளரவித்து வருகிறது. பத்ம விருதுகளில் உயரியது பத்ம விபூஷண் விருதாகும்.
இந்த ஆண்டு 13 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 35 பேருக்கு பத்மபூஷண் விருதும், 71 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்துள்ளது.
விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்தது. 56 பேர் நேற்று விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, முன்னாள் பிரதமர் குஜ்ரால், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலில் பின்னணிப் பாடகி ஆஷா போன்ஸ்லேவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து நாராயணமூர்த்தி, சச்சின் டெண்டுல்கர், மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஓபராய் ஆகியோருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.
பின்னர் எச்.சி.எல். நிறுவனத் தலைவர் ஷிவ் நாடார் உள்ளிட்ட 14 பேர் பத்மபூஷண் விருதைப் பெற்றனர்.
தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தன், டாக்டர் அர்ஜுனன் ராஜசேகரன், மீனாட்சி சித்தரஞ்சன் உள்ளிட்ட 36 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications