கொலையான செயலர் குழந்தைகளின் கல்வி செலவு: சரத் ஏற்பு
ஸ்ரீவைகுண்டம்: நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் கொல்லப்பட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி செயலாளரின் குழந்தைகளின் கல்விச் செலவுகளை கட்சித் தலைவர் சரத்குமார் ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் செயலாளர் சுயம்புலிங்கம் கடந்த 26ம் தேதி காலையில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்காக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று சுயம்புலிங்கத்தின் ஊரான பேட்டைதுரைசாமிபுரத்திற்கு வந்தார். அவரது வீட்டிற்கு சென்ற சரத்குமார், சுயம்புலிங்கத்தின் மனைவி பத்மா மற்றும் அவரது குழந்தைகளுக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். மூத்த மகள் நந்தினியை தூக்கி முத்தமிட்டார். பிறந்து சில நாட்களே ஆன கைக்குழந்தையை பார்த்து கண் கலங்கினார்.
பின்னர் அவர் கூறுகையில், சுயம்புலிங்கத்தின் மறைவு வருத்தமடைய செய்கிறது. அவர் இறந்த அன்று நான் கர்நாடகாவில் இருந்ததால் வர முடியாமல் போய்விட்டது. இந்த கொலை சம்பவத்தில் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து சிலரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் துடிப்பாகவும், சிறப்பாகவும் செயல்பட்டவர் சுயம்புலிங்கம்.
அவரது பிரிவால் வாடும் மனைவி பத்மாவுக்கு வேலை வாங்கி கொடுக்க அ.இ.ச.ம.க. முயற்சி செய்யும். அவர்களது குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்று கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கூறினார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications