கோவை சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் கொலை
கோவை: கோவை பஸ் நிலையத்தில் சந்தேக கேஸில் கைது செய்யப்பட்டு சிறுவர் சிறையில் அடைக்கப்பட்ட 15 வயது சிறுவன் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டான்.
கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் போலீசார் கடந்த 3ம் தேதி ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித்திரிந்த ஒரு சிறுவனை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் தனது பெயர் முபாரக் (15), பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம்பட்டியைச் சேர்ந்த முஸ்தபாவின் மகன் என்று கூறியுள்ளான். சில கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினான்.
இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவனுக்கு திருட்டு வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று கருதி முபாரக்கை கைதுசெய்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவனை காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, முபாரக்குக்கு 18 வயது நிரம்பவில்லையென்பதால் இளங்குற்றவாளியாக கருதி பாலர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அவினாசி மெயின்ரோடு பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் முபாரக்கை போலீசார் கொண்டு சேர்த்தனர்.
அங்கு இருந்த சில தண்டனை பெற்ற சிறுவர்களுடன் முபாரக்குக்கு பகை ஏற்பட்டுள்ளது. இருதரப்பும் அடிக்கடி சண்டையிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று பகல் உணவின்போது மோதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் 10 சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து முபாரக்கை இரும்பு கம்பியால் தலை, வயிறு, முதுகு என சரமாரியாக அடித்துள்ளனர்.
பலத்த உள் காயங்களுடன் முபாரக்கை சிகிச்சைக்காக நள்ளிரவில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அதிகாரிகள் சேர்த்தனர். அப்போது அவன் தன்னை கிருஷ்ணன் மற்றும் 10 பேர் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறிவிட்டு மயக்கமடைந்துள்ளான்.
தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த முபாரக் நினைவு திரும்பாமலேயே இன்று காலை உயிரிழந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார், சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் உள்ள 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முபாரக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவனது பெற்றோர், உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த முபாரக்கின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.