விபத்தில் பலியானவர்கள்: ரூ.10 லட்சம் முதல்வர் நிவாரண நிதி
சென்னை: தமிழகத்தி்ல விபத்து உள்பட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி 110வது விதியின்கீழ் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த சில வாரங்களாக நடந்த சில விபத்துக்களில் உயிரிழந்தவர்கள், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானவர்களுடைய குடும்பத்தினருக்கு பல்வேறு கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் நிவாரண நிதியிலிருந்து உதவி அளிக்கப்படுகிறது.
இதன்படி, வால்பாறை நீர்வீழ்ச்சியில் வழுக்கி விழுந்து, தண்ணீர் அடித்துச் சென்று உயிரிழந்த வசந்தாமணியின் கணவர் டி. ரவி என்பவருக்கும்- கீர்த்தனாவின் தந்தை ஜெயக்குமாருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்படுகிறது.
கோவைமாவட்டம் பில்லூர் அணை பகுதியில் தோண்டை என்னும் ஆதிவாசிகள் கிராமத்தில் அணையைக் கடக்க பரிசலில் சென்றபோது காளியூர் கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் பரிசல் கவிழ்ந்து பலியானார்கள்.
இதில் நீலன் என்பவருக்கு ஏற்கனவே விவசாயத் தொழிலாளர் சமூகப் பாது காப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 1 லட்சம் உதவி நிதி வழங்கப்பட்டு விட்டது. எஞ்சிய 4 நபர்களின் குடும்ப பொருளாதார நிலையைக் கருதி அவர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்படும்.
நாமக்கல் மாவட்டம், பில்லூர் கிராமத்தில் வசித்து வரும் பூங்கொடி என்பவரின் 10 வயது மகன் சஞ்சய், 20-12-2007 அன்று மழையின் காரணமாக திருமணி முத்தாற்றில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார். கணவனாலும் கைவிடப்பட்ட நிலையில், மகனையும் இழந்த பரிதாப நிலையைக் கருதி பூங்கொடிக்கு ரூ. 50ஆயிரம் குடும்ப நிவாரண நிதியாக வழங்கப்படும்.
குடியாத்தம் தொகுதியைச் சேர்ந்த தாஜ் ஷெரீப் என்ற வாலிபர் வனத் துறையினரின் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது மனைவி சம்சாதுக்கு ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது.
மதுரை மாநகராட்சியில் காலராவால் பலியான 5 வயது சிறுவன் சுரேஷ் குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம் உதவி நிதி வழங்கப்படுகிறது.
அரூர் தொகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் அமுது இனியவன், மகள் கிருஷ்ணம்மாள் ஆகிய இரண்டு பேரும் 5-5-2007 அன்று பேரையாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்கள். இரண்டு குழந்தைகளின் இழப்புக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் உதவி நிதி வழங்கப்படுகிறது.
காங்கேயம் நகரில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் காயமடைந்த 15 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது.
காவேரிப்பட்டணம் தொகுதியைச் சேர்ந்த, சென்னப்பன் என்பவரின் மகன் கடந்த குடியரசு தினவிழாவில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் உயிரிழந்தார். சென்னப்பனின் மற்றொரு மகனும் முந்தைய ஆண்டு குடியரசு நாளில் இறந்து விட்டார்.
அந்தக் குடும்பத்தின் பரிதாப நிலையை எண்ணிப் பார்த்து, ரூ. 50 ஆயிரம் இழப்பு நிதியாக வழங்கப்படுகிறது.
திருத்தணி தொகுதி ஸ்டாலின் நகர் பகுதியில் 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பலத்த காற்று அடித்த போது, சுவர் இடிந்து மங்கம்மாள் என்பவர் உயிரிழந்தார். மங்கம்மாளின் வாரிசுதாரரான அவரது மகள் கலா என்பவருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படுகிறது.
குடியாத்தம் தொகுதியைச் சேர்ந்த கோபி -ஸ்ரீதேவி ஆகியோரின் இரண்டு குழந்தைகளான சூரியா, சரவணன் ஆகியோர் கல்குவாரியில் தேங்கியுள்ள குட்டையில் 13-4-2008 அன்று விழுந்து பலியானார்கள்.
2 குழந்தைகளின் இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ. 50ஆயிரம் அவர்களுடைய குடும்பத்துக்கு வழங்கப்படும்.
அம்பாசமுத்திரம் தொகுதி அகஸ்தியர் பட்டி கிராமத்தில் மைக்கேல் என்பவரின் 16 வயதான மகன் திலீபன் தாமிரபரணி ஆற்று நீரில் மூழ்கி இறந்து விட்டார். அவரது குடும்பத்துக்கு ரூ. 50 ஆயிரம் உதவி நிதியாக வழங்கப்படும்.
வேறு சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொடுத்த கோரிக்கைகள் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் பரிந்துரைக்காகவும், நிர்வாக நடவடிக்கைக்காகவும் பரிசீலனையில் உள்ளன என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications