ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை-அன்புமணி
டெல்லி: டாக்டர் வேணுகோபால் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பால் எனக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நான் விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
டாக்டர் வேணுகோபாலை பதவி நீக்கம் செய்யும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பை அளித்தது.
இதையடுத்து அன்புமணி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவரை பிரதமர் மன்மோகன் சிங் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து டாக்டர் அன்புமணி கருத்து தெரிவிக்கையில், இது எனக்குப் பின்னடைவு அல்ல. சட்டத் திருத்தம் எனது தனிப்பட்ட முடிவு அல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஒப்புதலுடன் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் இது. இதை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோருவது வேடிக்கையாக உள்ளது. நான் ராஜினாமா செய்யும் கேள்விக்கே இடமில்லை.
தீர்ப்பின் முழு விவரமும் கிடைத்த பிறகே அதுகுறித்து நான் விரிவாக கருத்து ெதரிவிக்க முடியும் என்றார் அன்புமணி.
முன்னதாக உச்சநீதிமன்றத் தீர்ப்பையடுத்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளின் கூட்டத்தை அன்புமணி கூட்டி ஆலோசித்தார். இக்கூட்டத்தில் சுகாதாரத் துறைச் செயலாளர் நரேஷ் தயாளும் கலந்து கொண்டார்.