அமர்நாத் ஹெலிகாப்டர் யாத்திரைக்கு இன்டர்நெட்டில் புக்கிங் வசதி
இமயமலைச்சாரலில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் பனி லிங்கத்தை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் புனித யாத்திரை செல்ல ஆண்டுதோறும் 2 மாதங்கள் அனுமதி வழங்கப்படும்.
இந்தாண்டு ஜூன் மாதம் 18ம் தேதி தொடங்கி ரக்ஷா பந்தன் தினமான ஆகஸ்ட் 18ம் தேதி வரை இந்த புனித யாத்திரை நடைபெறுகிறது. காஷ்மீர் மாநிலம் பால்தல் என்ற இடத்தில் இருந்து அமர்நாத்துக்கு செல்ல ஹெலிகாப்டர் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஹெலிகாப்டர் பயணத்துக்கு இன்டர்நெட்டில் முன்பதிவு செய்யப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீ அமர்நாத்ஜி கோயில் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி அருண்குமார் கூறியதாவது:
அமர்நாத்துக்கு ஹெலிகாப்டரில் செல்வதற்கான முன்பதிவு வசதியில் 50 சதவீத ஒதுக்கீட்டை இன்டர்நெட் மூலம் யாத்திரிகர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துவருகிறது.
பால்தல் பகுதியில் பயணிகள் தங்குமிடங்களுக்கு இந்திய டிராவல் ஏஜெண்ட்கள் சங்க காஷ்மீர் மாநில கிளை மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
புனித யாத்திரையை பக்தர்கள் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கும், இதன்மூலம் சுற்றுலா வளர்ச்சி ஏற்படுத்துவதற்கும் உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கவேண்டும் என்று கருதுகிறோம்.
சமீபகாலமாகவே அமர்நாத் புனித யாத்திரை வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பதற்குக் காரணமே உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புதான். இந்த புனித பயணத்தால் காஷ்மீர் பொருளாதாரமும் நல்ல வளர்ச்சியைப் பெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி காஷ்மீர் மாநில சுற்றுலா ஏஜெண்ட் சங்கத் தலைவர் நசீர் ஷா கூறுகையில், அமர்நாத் செல்வதற்கு கூடுதல் ஹெலிகாப்டர் சேவையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்மூலம் காஷ்மீர் சுற்றுலா நிறுவனங்கள் பலன் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.