ஆன்லைனில் கல்விக்கடன், ரூ.6000 ஸ்காலர்ஷிப்- ப.சி. தகவல்

சிவகங்கையில் நடந்த விழாவில் ஓரியண்டல் வங்கியின் 1327வது கிளையை அமைச்சர் சிதம்பரம் இன்று தொடங்கி வைத்தார். அப்போது விழாவில் சிதம்பரம் பேசியதாவது:
இந்த ஆண்டு முதல் கல்விக் கடன் கோரி மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து தேசிய வங்கிகளில் இருந்து பெறும் வசதி அமல்படுத்தப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பத்தின் மூலம் வங்கிகளில் கடன் பெறும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 6 முதல் 7 தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் ஆன்லைன் விண்ணப்பங்களை வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இருந்தே இந்த வசதியை மாணவர்கள் பயன்படுத்தலாம். ஆண்டு இறுதிக்குள் இந்த வசதி எஞ்சிய தேசிய வங்கிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
கடந்த நிதியாண்டில் தேசிய வங்கிகள் முலமாக நாடுமுழுவதும் 12,51,692 மாணவர்களுக்கு ரூ.19,771 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது.
இது இந்திய அளவிலான சாதனையல்ல. உலக சாதனை ஆகும். வேறு எந்த நாட்டிலும் இதுவரை ஏறக்குறைய 20,000 கோடி ரூபாய்க்கு கல்விக்கடன் வழங்கப்பட்டதாக சரித்திரமே இல்லை.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர தட்டு மக்கள் இந்த கல்விக்கடனால் பலன் அடைந்துள்ளனர். இந்த கடனுக்கு ஈடாக பத்திரங்களோ, அடமானங்களோ தேவையில்லை.
கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களின் கையெழுத்தைமட்டும் பெற்று கடன் தொகையை விநியோகிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளேன்.
மாணவர்களின் கல்வி நலனில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அக்கறை காட்டிவருகிறது.
இதைப் புரிந்து கொண்டு மாணவர்களும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் இந்த கல்விக்கடனைப் பெற்று உயர்கல்வியைத் தொடர்வதற்கு ஆர்வமாக உள்ளனர். இந்த கடனை வாங்குவதற்கு மாணவர்கள் எந்த தயக்கத்தையும் காட்டக்கூடாது.
வங்கிகள் நமக்கு கடன் தருமா, தராதா என்ற கவலையே மாணவர்களுக்கு இருக்கக்கூடாது. தகுதிபடைத்த எல்லா மாணவர்களுக்கும் நிச்சயம் வங்கிக் கடன் வழங்கவேண்டும் என்று அரசாங்கம் பிறப்பித்துள்ள உத்தரவை வங்கிகள் நிச்சயம் மீறாது.
ரூ.6000 ஸ்காலர்ஷிப்
எட்டாம் வகுப்புடன் படிப்பை கைவிட்ட ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டண நிதியுதவியாக ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் புதிய திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நன்றாக படிக்கக்கூடிய மாணவர்கள் வறுமையின் காரணமாக எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தினால் அவர்களை தேர்ந்தெடுத்து இந்த நிதியுதவி வழங்கப்படும்.
முதற்கட்டமாக ஒரு லட்சம் ஏழை மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும். அடுத்து 2 லட்சம் மாணவர்களுக்கு என வரம்பை உயர்த்தி பின், தொடர்ந்து 5 லட்சம் மாணவர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும்.
கீழ்த்தட்டு வேலைகளில் பணியாற்றுபவர்களின் வாரிசுகளுக்கு ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்வியைத் தொடர வகை செய்யும் ஸ்காலர்ஷிப் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திறமையான தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வியுதவித் திட்டத்தின்கீழ் 15,370 பேர் பயனடைந்துள்ளனர். சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வியுதவி திட்டத்தின்கீழ் 20,000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாணவர் நன்மைக்காக பல்வேறு கல்வியுதவித் திட்டங்களை வழங்கியுள்ளது. ஆனால் இதுபற்றி சரியாகத் தெரிந்து கொள்ளாமல் மாணவர்கள் இருக்கின்றனர்.
இவ்வாறு சிதம்பரம் பேசினார்.












Click it and Unblock the Notifications