குமரியில் கடல் சீற்றம்- பீதியில் கிராம மக்கள் ஓட்டம்
கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதியில் தற்போது திடீரென்று கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ளது. பருவ நிலை மாற்றம் காரணமாக மே, ஜூன் ஆகிய மாதங்களில் கடல் சீற்றம் ஏற்படுவது வழக்கம். இந்த மாதங்களில் கடல் அலைகள் சீற்றத்துடன் அடிக்கும்.
இந்நிலையில் கடலோர பகுதிகளான தேங்காய்பட்டினம், முள்ளூர்துறை, ராமன்துறை, குளச்சல், கொட்டில்பாடு, மண்டைக்காடு, மேலமணக்குடி, கடியப்பட்டினம், இறையுமன்துறை, பூந்துறை, வல்லவிளை ஆகிய இடங்களில் கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
ராட்சத அலைகள் கரையை முட்டி உடைக்கின்றன. ஆக்ரோஷமாக அலைகள் அடிப்பதால் கடலோர கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
ராமன்துறை கிராமத்துக்குள் கடல் நீர் புகுந்து 15 வீடுகள் இடிந்து நாசமாயின. இதனால் பீதியடைந்த மக்கள் கிராமத்தை காலி செய்தனர். அருகில் உள்ள கிராமங்களில் உறவினர்களின் வீடுகளில் அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.