இலங்கை கிழக்கு மாகாணம்- முறைகேடுகளுடன் நடந்த தேர்தலில் ராஜபக்ஷே கட்சி வெற்றி
கருணா கும்பல் புலிகள் இயக்கத்தை விட்டு விலகியதையடுத்து அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை ஆகிய கிழக்கு மாகாணங்கள் ராணுவம் வசம் வீழ்ந்தன. இதையடுத்து அங்கு சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலை புலிகள் ஆதரவு கட்சிகள் புறக்கணித்துவிட்டன.
ஆளும் கட்சியும் கருணா தரப்பும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் பல முறைகேடுகள் நடந்தன. வன்முறைகளுக்கு இடையே நடந்து முடிந்த இந்தத் தேர்தலின் முடிவுகள் வெளியாயின.
இதில் ஆளும் கட்சிக்கு 20 இடங்களும் முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு 17 இடங்களும் கிடைத்தன.
இந்தத் தேர்தலையடுத்து அதிபர் ராஜபக்ஷே- கருணா தரப்புக்கு இடையே மோதல் வெடிக்கும் எனத் தெரிகிறது. இப் பகுதியில் தங்களது அமைப்பைச் சேர்ந்த பிள்ளையனை முதல்வராக நியமிக்க வேண்டும் என கருணா தரப்பு கோரியுள்ளது.
ஆனால், இப் பகுதியில் முஸ்லீம் ஒருவரை முதல்வராக நியமிக்க ராஜபக்ஷே முடிவு செய்துள்ளார்.
இந்த தேர்தலே ஒரு ஏமாற்று வேலை என்று எதிர்க்கட்சிகளும் தேர்தல் பார்வையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராணுவ ரீதியிலான ஒரு ராஜதந்திர நடவடிக்கையாகவே இந்த தேர்தலை அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.