சீனாவில் பயங்கர பூகம்பம்-நூற்றுக்கணக்கானோர் பலி?

சீனாவின் தென் மேற்கு மத்திய பகுதியில் இன்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7.8 புள்ளிகளாகப் பதிவானது. இதில் பள்ளிக் கூடங்கள் உள்பட பல கட்டடங்கள் இடிந்துள்ளன. பள்ளிக் கட்டடத்தில் 900க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிக்கியுள்ளனர். இதுவரை 5 மாணவர்கள் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மொத்த பலி 5000ஐ தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.
இன்று பகல் 2.28 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வு தாய்லாந்து, வியட்நாம் வரை உணரப்பட்டது.
சீனாவின் தென் மேற்கு-மத்தியப் பகுதியான செங்க்டூ-சாங்கிங் பகுதிகளில் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது.
இதையடுத்து மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். சுமார் 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பூகம்பத்தின் தாக்கம் இருந்தது. பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதால் பலியானோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
சாங்கிங் பகுதியில் 2 பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 4 மாணவர்கள் உள்பட 5 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். 900 மாணவர்கள் இடிபாடுகளில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மியான்யாங் பகுதியில் உயர்நிலை தண்ணீர் தொட்டி விழுந்து ஒருவர் பலியானார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சீன ராணுவம் இறக்கி விடப்பட்டுள்ளது.
டுஜியாங்ஜியான் நகரில் வீடுகள் வரிசையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளன. தொடர்ந்து தென் மேற்கு சீனாவில் நில அதிர்வுகள் உணரப்படுட்டு வருகின்றன. இதனால் பதற்றமும் பீதியும் நிலவுகிறது.
பூகம்பம் மையம் கொண்ட பகுதியில் இருந்து 1,528 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெய்ஜிங்கிலும் அதிர்வு உணரப்பட்டது. அங்கும் கட்டடங்கள் பலமாக ஆட்டம் கண்டுள்ளன.
சீனாவில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் நடக்க உள்ள நிலையில் இந்த பூகம்ப தாக்குதல் அந்நாட்டுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஒலிம்பிக் நடக்கும் பகுதி எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
கடந்த 1976ம் ஆண்டு வடக்கு சீனாவில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2.55 லட்சம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications