திமுக மகளிர் மாநாடு மீண்டும் மாற்றம்-ஜூன் 14,15ல் நடக்கும்
சென்னை: திமுக மகளிர் அணி மாநாடு மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 14, 15 தேதிகளில் மாநாடு நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
திமுக மகளிர் அணியின் முதல் மாநாடு மே 24, 25ம் தேதிகளில் கடலூரில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளும் ஜரூராக நடந்து வந்தது.
இந்நிலையில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் மாநாட்டுக்கு வருவோர் சிரமப்படுவார்கள் என்று மாநாடு ஜூலை 12, 13 தேதிகளில் நடக்கும் என்று கடந்த சில நாட்களுக்கு முன் அக்கட்சி அறிவித்தது.
தற்போது மீண்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்தாண்டு சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மகளிர் அணி மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் 14, 15ம் தேதிகளில் கடலூரில் மாநாடு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் மாநாட்டு வேலைகள் மீண்டும் சூடுபிடித்துள்ளது. மாநாட்டின் முதல் நாள் மகளிர் அணி சார்பில் பிரம்மாண்ட பேரணி நடக்கிறது. இதில் மகளிர் அணியினர் சீருடை அணிந்து பங்கேற்கின்றனர். முதல்வர் கருணாநிதி உள்பட கட்சியின் முக்கிய முன்னணி நிர்வாகிகள் தனி மேடையில் அமர்ந்து பேரணியை பார்வையிடுகின்றனர்.
மாநாடு தேதி அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதால் மாநாட்டுக்கு வருவோருக்கு தங்கும் இடவசதி செய்து கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடலூர், புதுச்சேரி, பண்ரூட்டி ஆகிய பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களையும் லாட்ஜ்களையும் திமுகவினர் முன்கூட்டியே புக் செய்து வருகின்றனர்.