கூட இருந்தே குழி பறிப்போரின் தோழமை: கருணாநிதி வேதனை
சென்னை: பிறந்தநாள் வேண்டாம் என்று தான் கூறியதற்கு முதல்வர் காரணம் தெரிவித்துள்ளார். கூட இருந்தே குழிப பறிப்போரின் சிலரது தோழமைதான் கிடைக்கிறது என்று வேதனையுடன் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெயிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற தமிழ்மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவர்களால் வலியுறுத்தப்பட்டதும், எதிர்கால தமிழகம் ஏற்றம் கண்டிட வாணிப பெருக்கும், வளங்கள் குவிப்பும் வழங்கிடும் வற்றாப் பெருங்கொடையாக விளங்கக் கூடியதும் எல்லா கட்சியினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டதுமான சேது சமுத்திர திட்டம் தொங்கலிலே விடப்பட்டுக் கிடக்கிறது.
இன்னும் எத்தனை நாட்கள் வாழப்போகிறோம் என்ற கேள்விக்கு பதில் தேடிய நாட்கள் ஓடிப்போய், செத்து செத்துப் பிழைக்கின்ற நேரத்தை நினைத்தவாறு நடுங்கச் செய்யும் தீவிரவாத மிரட்டலுக்கிடையே தேசத்தை பாதுகாப்பதா? தேகத்தை துளைத்து கூறுபோடும் குண்டு மழைக்கிடையே குழந்தை குட்டிகளோடு கிடந்து தவிப்பதா? அதுவும் இப்போதா அல்லது எப்போதோ என்று வினா தொடுக்கும் விபரீத தீவிரவாதம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.
குழி பறிக்கும் தோழமை:
நாடு வாழ நலிவு தீர நானிலம் தழைக்க நாலைந்து பேராக கூட்டணி சேர்ந்து நமக்கு நாமே என்று நற்செயல் புரியலாம் என்றால், கூட இருந்தே குழி பறிப்போரின் சிலரது தோழமைதான் கிட்டுகிறது. இந்த நிலையில் அவர்கள் விருந்துக்கு அழைத்தால் அது வேம்பாய் கசக்கிறது.
என்னுடன் இருப்போர் தன்னலம் மறப்போர் என்ற பீடும் பெருமிதமும் வாய்க்கும் வரையில் எனக்கு ஏன் பிறந்தநாள் விழா?
பிறந்தநாள் என்று ஒரு நாள் வருவது எதற்காக என்ற ஏக்க பெருமூச்சினை வெளிபடுத்துவதே பிறந்தநாள் கொண்டாட வேண்டாம் என்ற என் வேண்டுகோளுக்கு முக்கிய காரணம் என்று வேதனையுடன் அந்த அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.