எல்டிடிஈ மீதான தடை மேலும் 2 ஆண்டு நீடிப்பு
டெல்லி: விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கடந்த 1991ல் நடந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலையை அடுத்து மத்திய அரசு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை விதித்தது.
ராஜிவ்காந்தி கொலைவழக்கில் முதல் குற்றவாளியாக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சேர்க்கப்பட்டார். அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு அமெரிக்கா உள்பட பலநாடுகள் தடை விதித்து உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் இந்த இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை விரைவில் காலாவதியாக இருந்தது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விடுதலைப்புலிகள் இயக்கம் சட்டவிரோதமான அமைப்பாகும். இந்த அமைப்புக்கு ஏற்கெனவே இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தடை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.