கர்நாடக 2ம் கட்ட தேர்தலில் 65-70% வாக்குகள் பதிவு

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்தது. 2ம் கட்டமாக ராய்ச்சூர், கொப்பல், வட கன்னடம், தென் கன்னடம், பெல்லாரி, சித்ரதுர்கா, தாவணகெரே, ஷிமோகா, உடுப்பி, சிக்மகளூர் ஆகிய 10 மாவட்டங்கள் அடங்கிய 66 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது.
இந்த தொகுதிகளில் ஒரு கோடியே 10 லட்சம் வாக்காளர்கள் இன்று ஓட்டுப் பதிவு செய்ய உள்ளனர். அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் என்று 589 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்காளர்களின் வசதிக்காக 270 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பாஜகவின் எதியூரப்பாவும், சமாஜ்வாதி கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் பங்காரப்பாவும் ஷிகாரிபுரா தொகுதியில் நேருக்கு நேர் மோதுகின்றனர். மாநில அரசியில் வரலாற்றில் 2 முன்னாள் முதல்வர்கள் ஒரே தொகுதியில் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்.
சொருபா தொகுதியில் பங்காரப்பாவின் மகன்களான குமார் பங்காரப்பா மற்றும் மதுபங்காரப்பா ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர். பெல்லாரி, தாவணகெரே, சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்கள் குவாரி அதிபர்களின் ஆதிக்கத்தில் உள்ளன.
இந்நிலையில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
நண்பகல்வரை வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் ஓட்டுப்பதிவு மந்தமாகவே இருந்தது. பிற்பகல் 1 மணிவரை 25 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது.
காலையில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு பிற்பகலில் விறுவிறுப்படைந்தது. பின்னர் மாலையில் குறைந்தது.
இறுதியாக 5 மணியுடன் முடிந்த வாக்குப்பதிவில் தென் கன்னடம் மாவட்டத்தில் அதிகபட்சமாகவும், ஷிமோகாவில் குறைந்தபட்சமாகவும் பதிவானதாகவும் மொத்த சராசரி வாக்குப்பதிவு 65 முதல் 70 சதவீதம் என்றும் தெரிகிறது. சிக்மகளூர் மற்றும் வடகன்னட மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகின
கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா தமது ஷிகாரிபுரா தொகுதியில் வாக்களித்தார். மற்றொரு முன்னாள் முதல்வர் பங்காரப்பா, அவரது மகன் மது பங்காரப்பா, பாஜக கட்சியின் மாநில தலைவர் சதானந்த கௌட, காங்கிரஸ் தலைவர்கள் ஆஸ்கர் பெர்ணான்டஸ், முன்னாள் அமைச்சர் சங்கரமூர்த்தி, பெல்லாரி ஸ்ரீராமுலு, டி.வி.சந்திரகௌட மற்றும் உடுப்பி ஜீயர் பேஜாவரா ஸ்வாமிஜி, சித்ரதுர்கா முருக ராஜேந்திர ஸ்வாமிஜி ஆகியோர் இன்று வாக்களித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாகும்.
முதல் கட்ட வாக்குப்பதிவின் போது இருந்த வாக்காளர் பட்டியல் குழப்பம் இந்த தேர்தலிலும் இருந்தது. அடையாள அட்டை வைத்திருந்தும் பட்டியிலில் இடம் பெறாததால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றமடைந்ததாக பலரும் தெரிவித்தனர்.
நக்ஸலைட்டுகள் நிறைந்த உடுப்பி, வட கன்னட, சிக்மகளூர், ஷிமோகா மாவட்டங்களில் சில பதற்றமான பகுதிகளில் துணை ராணுவ படை உள்பட 75,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று பாதுகாப்பை மீறி உடுப்பி அருகே நக்சலைட்டுகள் திடீரென்று நடத்திய தாக்குதலில் கல்லூரி விரிவுரையாளர் ஒருவரும், போலீஸ் ஏட்டு ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வாக்காளர்கள் பீதி அடைந்தனர். இன்று ஓட்டுப் போட வராமல் வீட்டுக்குள் பதுங்கி இருந்தனர். தகவல் அறிந்து துணை ராணுவத்தினரும் போலீசாரும் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து மக்கள் தைரியமாக வந்து ஓட்டு போட்டனர்.
மற்றபடி, குறிப்பிடும்படியான அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை.
வரும் 22ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது.












Click it and Unblock the Notifications