கொழும்பு தற்கொலை தாக்குதலில் 9 பேர் பலி- காயம் 90

கொழும்புவில் நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதயா நானயாகரா கூறுகையில், போலீஸார் பஸ் மீது விடுதலைப்புலிகள் நடத்திய இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மனித வெடிகுண்டாக செயல்பட்டவரோடு சேர்த்து 8 போலீஸ்காரர்களும் பலியாயினர். இதில் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் தற்கொலைப்படையைச் சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து போலீஸ்காரர்களை ஏற்றிவந்த பஸ் மீது மோதி வெடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.
கொழும்பு கமர்ஷியல் தெருவில் உள்ள புத்தர் கோயில் முன்பாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதிக்கு பாதுகாப்பு படையினர் சீல் வைத்துள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் அதிகாரப்பூர்வ இல்லம், ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஹில்டன் மற்றும் ஏற்கெனவே விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு ஆளான உலக வர்த்தக மைய அலுவலக காம்ப்ளக்ஸ் ஆகிய முக்கிய கட்டடங்கள் இந்த பகுதியில்தான் அமைந்திருக்கின்றன என்பதால் இந்த சம்பவம் இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் வட மாகாணத்தில் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளில் சிங்கள ராணுவத்தினர் கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் பழிதீர்க்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதலை விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருக்கலாம் என்று ராணுவத்தினர் கருதுகின்றனர்.
இதுதவிர சில நாட்களுக்கு முன்பு இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே கூறுகையில், புலிகளுடன் மீண்டும் போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களது துடிப்பான பாதுகாப்பு படையினரின் கையளவு தூரத்தில் வெற்றிக்கனி இருக்கிறது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று குறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications