திமுக அரசு மீது ராமதாஸ் மதிப்பீடு- கருணாநிதி அலட்சியம்
சென்னை: பெரியார், அண்ணாதுரை, காமராஜர் ஆகியோரிடம் நான் 'பாஸ்மார்க்' வாங்கியவன்
ராமதாஸ் 'ஃபெயில் மார்க்' போடுவதால் ஒன்றும் குறைந்துவிடாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக ஆட்சி 2 ஆண்டுகள் நிறைவு செய்து 13ம் தேதியன்று மூன்றாம் ஆண்டைத் தொடங்கியுள்ளது. இதற்கு சட்டசபையில் கூட்டணி கட்சிகள் பாராட்டு தெரிவித்தன. ஆனால் திமுக அரசு தேர்ச்சி பெறவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டிருந்தார்.
இதுபற்றி முதல்வர் கருணாநிதி அளித்த பதிலில், நான் ஏற்கெனவே எல்லா பாடங்களிலும், பொதுவான அரசியல் சமுதாயத் தேர்வுகளிலும் பெரியார், அண்ணாதுரை, காமராஜரிடம் 'பாஸ் மார்க்' வாங்கியுள்ளேன்.
ராமதாஸ் எனக்கு 'ஃபெயில் மார்க்' போடுவதால் ஒன்றும் குறைந்துவிடாது. நான் எஸ்எஸ்எல்சி ஃபெயில் ஆனவன். அதனால்தான் இயக்கத்திலும், பொதுவாழ்விலும் ஈடுபட்டு முதல்வராகவே ஆகி இருக்கிறேன்.
ராமதாஸ் சொல்வதால் எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை. அதை ஒரு 'கிரெடிட்' ஆகவே கருதுகிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
60 மார்க்-மார்க்சிஸ்ட்
இந்த நிலையில் திமுக அரசின் 2 ஆண்டுகால ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்ன மதிப்பெண் கொடுக்கிறது என்று கேட்டதற்கு, 60 மதிப்பெண்களை வழங்குவதாக வரதராஜன் தெரிவித்தார்.மேலும், ஏற்கனவே மார்க்சிஸ்ட் கட்சி சுட்டி காட்டிய குறைபாடுகளை களைந்து திமுக அரசு முன்னேற்றம் காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார் வரதராஜன்.