ராஜிநாமா செய்ய வேண்டியது கருணாநிதிதான்-ஜெயலலிதா
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெருங்கிய உறவினர் தொடர்புடைய ஊழல் வழக்கை அவருக்கு சாதகமாக கையாளுமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் போன் மூலம் கேட்டுக் கொண்டதற்காக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா செய்துள்ளார். சுயமரியாதையுடன் செயல்பட்ட அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது அமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்று செயல்பட்டுள்ளதைப் பயன்படுத்தி முதல்வர் கருணாநிதி லாபம் அடைய முயல்கிறார். ஆனால் உண்மை வேறானது. கருணாநிதியைப் பொறுத்தவரை பூங்கோதை அவசியம் இல்லாதவர். அவர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினரும் அல்ல.
போன் ஒட்டுக் கேட்கப்படும் ஒட்டு மொத்த விவகாரத்துக்கும் முதல்வரின் பதில் என்ன? முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் உள்துறை உள்ளது. இவரது உத்தரவின்பேரில் போன் ஒட்டுக்கேட்கப்பட்டதா? அல்லது முதல்வருக்கு தெரியாமலேயே ஒட்டுக் கேட்கப்பட்டதா?
அப்படியானால் முதல்வரின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே இந்த பிரச்னையில் முதல்வர் ராஜிநாமா செய்ய வேண்டும். இந்த பிரச்னையில் ஆதாரங்களும் சான்றுகளும் கண்முன் தெரியும்போது விசாரணை கமிஷன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்?
அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்திய அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா செய்துள்ளார். காவல் நிலைய லாக்கப்பில் இருந்த ரவுடியை விடுவித்த அமைச்சர் கே.பி.பி.சாமி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
தனது மனைவி மற்றும் மகன்களின் சொந்த நிறுவனத்துக்கு சலுகைகள் பெற அதிகாரிகளிடம் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்திய பாலுவின் நிகழ்வில் கருணாநிதியின் தார்மீகப் பொறுப்பு எங்கே போனது?
இதற்கெல்லாம் சரியான பதிலை சொல்ல முடியவில்லை என்றால் அதிகாரத்தில் தொடரும் தார்மீக உரிமையை முதல்வர் இழந்துவிட்டார் என்றே அர்த்தம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.