தந்தையை கொன்று நாடகமாடிய மகன் கைது
நெல்லை: குடிபோதையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை முன்னீர்பள்ளம் அருகேயுள்ள மேலசெவலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சரவணன், விவசாயி. திருமணமாகி குழந்தைகள் உள்ளபோதும் சரவணன் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார்.
இதனால் மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளை கிருஷ்ணன் பராமரித்து வந்தார். இந்நிலையில் மேலச்செவல் அருகேயுள்ள தோட்டத்தில் கிருஷ்ணன், ஆடுகளுக்கு இலை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த சரவணன், கிருஷ்ணனிடம் தகராறு செய்தார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து சரவணன் சரமாரியாக கத்தியால் குத்தியதால் கிருஷ்ணன் அதே இடத்தில் பலியானார். பயந்துபோன சரவணன் கொலையை மறைப்பதற்காக தனது தந்தை கிருஷ்ணன், மரத்தில் ஏறி ஆடுகளுக்கு இலை பறித்தபோது கால் தவறி கீழே விழுந்து இறந்ததாக அனைவரிடமும் கூறினார்.
சந்தேகத்தின்பேரில் அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் கிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இதில் அவரது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் சரவணன் கைது செய்யப்பட்டார்.