கேங்மென் வேலை - போர்ட்டர்கள் அதிருப்தி!
சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக தெற்கு ரயில்வேயைச் சேர்ந்த 33 சென்னை போர்ட்டர்கள், கேங்மென்களாக நியமனம் செய்யப்பட்டு பணியிலும் சேர்ந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில், ரயில்வே போர்ட்டர்கள், ரயில்வே ஊழியர்களாக நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சீனியர் போர்ட்டர்களை முதல் கட்டமாக ரயில்வே ஊழியர்களாக நியமிக்கும் பணி தொடங்கியது. இதில் முதல் முறையாக தெற்கு ரயில்வேயின், சென்னை கோட்டத்தைச் சேர்ந்த 33 போர்ட்டர்களுக்கு கேங்மென் வேலை தரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக போர்ட்டர்களை ரயில்வே ஊழியர்களாக நியமித்த பெருமை இதன் மூலம் தெற்கு ரயில்வேக்குக் கிடைத்துள்ளது.
கேங்மென்களாக நியமிக்கப்பட்டுள்ள 33 போர்ட்டர்களும் சனிக்கிழமை முதல் பணியில் சேர்ந்துள்ளனர்.
இருப்பினும் கேங்மென் பணியில் சேர போர்ட்டர்களிடையே அதிகளவில் ஆர்வம் இல்லை என்று ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். சென்னை கோட்டத்தில் மொத்தம் 875 போர்ட்டர்கள் உள்ளனர். இவர்களை ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 1ம் தேதிக்குள் மருத்துவப் பரிசோதனைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் 600 போர்ட்டர்கள் மட்டுமே மருத்துவ தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களில் 479 பேர் முழு உடல் தகுதியுடன இல்லை. இடஒதுக்கீடு அடிப்படையில் மற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 209 பேர், தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 2 பேர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 95 பேர், பொதுப் பிரிவைச் சேர்ந்த 15 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 33 பேருக்கு வெள்ளிக்கிழமை பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அனைவரும் சனிக்கிழமையன்று பணியில் சேர்ந்தனர். மீதமுள்ள 288 பேருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவுள்ளது.
படிப்புத் தகுதி, உடல் நலன் தவிர 18 முதல் 50 வயதுக்குட்பட்டோர்தான் தற்போது பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டுள்ள அனைவரும் சென்னை நகருக்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தற்காலிக கேங்மென் என்று பணி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 2 ஆண்டுகளுக்கு மட்டுமே பணி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலருக்கு இந்த நியமனத்தில் திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் என்ன ஆவோம் என்ற கவலையும் போர்ட்டர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 5000 வரை கிடைக்கும். இருப்பினும் போர்ட்டர் வேலையில் இதை விட 3 மடங்கு தற்போது சம்பாதிப்பதாக போர்ட்டர்கள் கூறுகிறார்கள்.
அரசு வேலை, ஓய்வூதியம் என்ற பல கவர்ச்சிகரமான அம்சங்கள் இதில் இருந்தாலும், அதையும் தாண்டி குறைந்த சம்பளம், இடமாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள், போர்ட்டர்களிடையே கவலையையும், திருப்தியின்மையையும் ஏற்படுத்தியுள்ளதை காண முடிகிறது.












Click it and Unblock the Notifications