பாக். மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 13 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ராணுவ பயிற்சி மையம் அருகே நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் வட மேற்குப் பகுதியில் உள்ள மார்டான் நகரில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. நேற்று இரவு இந்த மையத்தின் நுழைவாயிலில் உள்ள கடைக்கு வந்த மனித வெடிகுண்டு தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.
இதில் குண்டு வெடித்து அந்தப் பகுதியில் இருந்த 4 வீரர்கள் உள்பட 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது. அப்பகுதி சீல் வைக்கப்பட்டது. தலிபான் இயக்கம்தான் இந்த தாக்குதலுக்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
சில காலமாக ஓய்ந்திருந்த தற்கொலைப் படைத் தாக்குதல்கள் மீண்டும் பாகிஸ்தானில் அதிகரித்திருப்பது அந்நாட்டு அரசுக்குப் பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது.
நேற்றைய சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் உள்பட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.