கர்நாடகம்-தேர்தல் முடிந்தது: 25ல் வாக்கு எண்ணிக்கை
பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபைக்கு 3வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு இன்று அமைதியாக நடந்து முடிந்தது.
இதில் சுமார் 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
வட கர்நாடகத்தில் உள்ள பெல்காம், தார்வாட், ஹவேரி, பீதர், குல்பர்கா, பீஜப்பூர், பாகல்கோட், காடக் ஆகிய 8 மாவட்டங்களுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கு மொத்தம் 69 சீட்கள் உள்ளன. மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இன்றைய வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் முன்னாள் முதல்வர் தரம்சிங், மாநில காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சட்ட மேலவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எச்.கே.பாட்டீல், முன்னாள் அமைச்சர்கள் நாகமரப்பள்ளி, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், உதாசி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
முன்னதாக நடைபெற்ற இரண்டு கட்ட வாக்குப் பதிவுகளிலும் பாஜகவே அதிக இடங்களில் வெல்லும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
மொத்தமுள்ள 224 இடங்களில் அந்தக் கட்சிக்கு 120 இடங்கள் வரை கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. காங்கிரசுக்கு வெறும் 50 இடங்களும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 45 இடங்கள் வரையிலும் கிடைக்கலாம் என கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
வரும் 25ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.