மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு-நாளை அறிவிப்பு?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் மொத்தமாக ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வரலாறு காணாத அளவுக்கு நஷ்டம் அதிகரித்திருப்பதால் பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்த வேண்டும் என மத்திய பெட்ரோலியத் துறையை, இந்த நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து பெட்ரோலிய விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை பிரதமர் தலைமையில் கூடவுள்ளது. இக்கூட்டத்தில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ. 2 முதல் 5 வரை உயர்த்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோராவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதுகுறித்து மறுக்கவும் இல்லை, அதேசமயம், உறுதிப்படுத்திக் கூறவும் இல்லை.
முரளி தியோரா கூறுகையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களைக் காக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்களைக் காக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.
இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன். பொதுத்துறை நிறுவனங்களின் நிலை குறித்து அரசு பெரும் கவலையுடன் உள்ளது. இருப்பினும் இதனால் பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்றார்.
தற்போது இந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கும் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோகத்திற்கான காஸ் சிலிண்டர்கள் விற்பனை மூலம் ரூ. 450 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டு வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோலால் லிட்டருக்கு ரூ. 16.34ம், டீசலுக்கு ரூ. 23.49ம், காஸ் சிலிண்டருக்கு ரூ. 305.90ம், மண்ணெண்ணையால் லிட்டருக்கு ரூ. 28.72ம் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
நாளை காலை பெட்ரோலிய நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார் முரளி தியோரா. அதன் பின்னர் மத்திய அமைச்சரவை கூடி விவாதிக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications