பரம்பிக்குளம் ஒப்பந்தம்: மே 30ல் தமிழகம் - கேரளா பேச்சு
திருவனந்தபுரம்: பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஒப்பந்தம் குறித்து வருகிற 30ம் தேதி தமிழக, கேரள மாநில தலைமைச் செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஒப்பந்தத்தின் கீழ் வரும் சோலையாறு வடிநிலம் தொடர்பான பிரச்சினை குறித்து இரு மாநில தலைமைச் செயலாளர்களும் வருகிற 30ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
பரம்பிக்குளம் திட்ட ஒப்பந்தத்தின் கீழ் சாலக்குடி ஆற்றுப் படுகையில் 7.25 டி.எம்.சி நீரும், சோலையாறு படுகையில், 12.3 டி.எம்.சி நீரும் தமிழகம், கேரளத்திற்குத் தர வேண்டும்.
ஆனால் ஒப்பந்தப்படி கேரளா உரிய நீரை கடந்த பல ஆண்டுளாகவே பெறவில்லை.
பேச்சுவார்த்தையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவு செய்ய நீர்ப்பாசனத்துறை மற்றும் மின்துறை மூத்த அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் அறிக்கை முதல்வர் அச்சுதானந்தனிடம் வழங்கப்படும். அதன் அடிப்படையில் கேரள தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications