'மணல்'-அனைத்துக் கட்சிக் கூட்டம்: அதிமுக, மதிமுக புறக்கணிப்பு

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ல அறிக்கையில், தமிழக மக்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மதிக்காமல் செயல்படுவது முதலமைச்சர் கருணாநிதிக்கு கைவந்த கலையாகும்.
இப்படிப்பட்டவர் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப் போகின்ற முடிவை மதித்து நடப்பார் என்ற நம்பிக்கை அதிமுகவுக்கு இல்லை.
காவிரி நதிநீர் பிரச்சனை சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது குறித்து தமிழக சட்டசபையிலும், மேலவையிலும் 18.7.1971 அன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி 4.8.1971 அன்று உச்சநீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வற்புறுத்தலாலும், தமிழ்நாட்டில் அரசியல் நெருக்கடி காரணமாகவும் 28.8.1972 அன்று அந்த வழக்கு கருணாநிதியால் தன்னிச்சையாக திரும்ப பெறப்பட்டது.
இதே போல ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று 27.3.2008 அன்றும், 1.4.2008 அன்றும் சட்டசபையில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால் சட்டசபைக்கு வெளியே 5.4.2008 அன்று யாரையும் கலந்தாலோசிக்காமல் அத்திட்டம் நிறுத்தப்படுவதாக தன்னிச்சையாக அறிவித்தார்.
மணல் குவாரிகளில் மணலை எடுத்து விற்பனை செய்வதை பரவலாக்கவும், கூடுதல் கண்காணிப்பை உறுதி செய்யவும், குடிநீர் ஆதாரங்களை பாதுகாக்கவும் மாவட்ட கலெக்டர்களுக்கு ஒப்பந்தப்புள்ளி மற்றும் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்ய அதிகாரம் வழங்குவது என்று 19.5.2008 அன்று கருணாநிதி தன்னிச்சையாக அறிவித்தார். இது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
கருணாநிதியின் இந்த திடீர் அறிவிப்புக்கு அதிமுகவும், மைனாரிட்டி திமுக அரசை தாங்கி பிடிக்கும் கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தவுடன் ஒரு சமாளிப்பு நடவடிக்கையாக தமிழக சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் என்ற ஒரு கண்துடைப்பு நாடகத்தை முதலமைச்சர் நடத்தி இருக்கிறார்.
தன்னிச்சையான முடிவுகளால் தமிழக மக்களை தொடர்ந்து அவமானப்படுத்தி கொண்டிருக்கும் கருணாநிதி, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டும் தார்மீக உரிமையை என்றோ இழந்து விட்டார். அதற்கான தகுதி முதலமைச்சருக்கு இல்லை.
அதிமுகவின் கருத்து ஏற்கனவே எனது அறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டு விட்டது. எனவே ஆற்று மணல் விற்பனை விவகாரம் தொடர்பாக திமுக அரசு 26ந் தேதி கூட்டவிருக்கும் தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதே காரணத்தை சுட்டிக் காட்டி, கூட்டத்தைப் புறக்கணிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அறிவித்துள்ளார்.
தேமுதிகவும்...
தேமுதிகவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications